ருதுவான திதிகளும் பரிகாரங்களும்

ருதுவான திதிகளும் பரிகாரங்களும்

ஜோதிட சாஸ்திரத்தில் பெண்கள் ருதுவாகிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. ருதுவான நேரம், கிழமை முதலியவை பலன் சொல்வதற்கு முக்கியமாக தேவைப்படும்.
ஆண்களுக்கு பிறந்த ஜாதகம் மட்டும் போதும். ஆனால், பெண்களுக்கு பிறந்த ஜாதகத்தோடு, ருதுவான ஜாதகமும் இருந்தால்தான் பலனை முழுமையாகக் கணிக்கமுடியும். இப்படியாக பெண்களுக்கு பிறப்பு ஜாதகம், ருது ஜாதகம் என்று இரண்டு ஜாதகங்கள் உண்டு. முற்பகல், பிற்பகல், அஸ்தமன காலம், நடுராத்திரி, பின்ராத்திரி, சந்திகளில் ருதுவானால், பரிகாரம் செய்யவேண்டும். இறைவனுக்கு முத்துக்குடை கோவிலுக்கு தானம் கொடுத்தால், நலம் பெறலாம். இனி தனித்தனியாக பரிகாரங்களைப் பார்க்கலாம்.
1. பிரதமையில் ருதுவானால் :
ருதுவான பெண்கள் ஆலயங்களில் நடக்கும் விளக்கு பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். விளக்கு பூஜைக்கு நெய் தானம் செய்தால் கஷ்டம் குறையும்.
2. சதுர்த்தியில் ருதுவானால் :
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை போட்டு வழிபாடு செய்யவேண்டும். கெட்ட பெயர் நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும்.
3. சஷ்டியில் ருதுவானால் :
முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், அபிஷேகம், செய்துவர துன்பங்கள் நீங்கும். கண்டங்களும் விலகி சுகபோகங்கள் உண்டாகும்.
4. அஷ்டமி திதியில் ருதுவானால் :
சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி அபிஷேகம் செய்யவேண்டும். அரக்க குணம் உள்ளவர்கள் கூட மாறி, இரக்க குணம் உண்டாகும். வாழ்க்கை சிறப்புறும்.
5. துவாதசி திதியில் ருதுவானால் :
வெங்கடேச பெருமாளை வழிபட்டுவர வேண்டும். நற்குணவதி என்ற பெயர் கிடைக்கும்.
6. சதுர்த்தி திதியில் ருதுவானால் :
அமரபட்சம் சதுர்த்தி திதியில் விரதமிருந்து சிவனை வழிபாடு செய்யவும். சோதனைகள் விலகி நன்மை கிடைக்கும்.
7. பௌர்ணமி திதியில் ருதுவானால் :
பௌர்ணமி அன்று பௌர்ணமி விரதம் இருந்து அம்பாளுக்கு பௌர்ணமி பூஜை செய்யவேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள் உண்டாகும்.
8. அமாவாசை திதியில் ருதுவானால் :
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தத்தில் நீராடி கடவுளை வழிபட தரித்திர நிலை நீங்கும்.
எனவே மேலே சொன்ன திதிகளில் ருதுவானவர்கள் மேலே சொல்லப்பட்ட பரிகாரங்கள், சாந்தி ஹோமங்களை செய்து பலன் பெறலாம்.