வெற்றியை தீர்மானிக்கும் புத்தி ரேகை!

வெற்றியை தீர்மானிக்கும் புத்தி ரேகை!

உள்ளங்கையில் சில உண்மைகள்
உள்ளங்கையில் ஆயுள் ரேகைக்கு அடுத்ததாக தெரிந்துகொள்ளப்பட வேண்டியது, புத்தி ரேகை (Head Line). மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி, ஓர் உயர்ந்த ஜீவனாக்குவது அவனது ஆறாவது அறிவே ஆகும். இதையே பகுத்தறிவு என்றும், புத்திக்கூர்மை என்றும், விவேகம் என்றும் பல சொற்களால் குறிப்பிடலாம்.
மனித உடலில் புத்தி அல்லது அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் உறுப்பு, மூளை. அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது தலை.ஒருவனது அறிவு, புத்திக்கூர்மை, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை அமையும் விதத்தை, புத்தி ரேகையின் (Head Line) அமைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆழமாக, தெளிவாக, நீண்டு அமைந்துள்ள புத்தி ரேகை, ஒருவரது சிறப்பான அறிவாற்றலைக் குறிக்கும். இந்த ரேகையின் அமைப்பு சரியாக இல்லாவிட்டால், அறிவாற்றல் குறையும். அதனால் வாழ்வில் வளர்ச்சியின்மையும், ஏமாற்றங்களும், தோல்விகளும் உண்டாகும்.
உள்ளங்கையின் நடுவில் ஆயுள் ரேகைக்கு மேலும், இருதய ரேகைக்குக் கீழேயும் புத்தி ரேகை அமையும் (படம்1). பெரும்பாலும் குரு மேட்டில் இருந்தோ, செவ்வாய் மேட்டில் இருந்தோ இந்த ரேகை ஆரம்பமாகும். இந்த வகைப்படி செவ்வாய் மேடு அல்லது குரு மேட்டில் தொடங்கி, நீண்டு அமைந்துள்ள புத்தி ரேகையை உடையவர்கள் தெளிவான அறிவாளிகள். சிறந்த உயர்கல்வியைப் பெறுவார்கள். கல்வியையும், அறிவாற்றலையும் பயன்படுத்தி, தொழில் செய்து பொருளீட்டி வாழ்க்கையில் உயர்வார்கள்.
சிலருக்கு உள்ளங்கையின் மையப்பகுதியில் இருந்தும் இந்த ரேகை ஆரம்பமாகலாம் (படம்2). ஆயுள் ரேகையோடு சேர்ந்தோ, அல்லது தனியாகவோ, புத்தி ரேகை அமையலாம்.
பொதுவாக புத்தி ரேகை கீழ்க்கண்ட வகைகளில் அமையும்.
1. ஆயுள் ரேகையின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கி, ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டோ, அல்லது வெட்டிக்கொண்டோ உள்ளங்கையின் மறுபக்கம் வரை நீண்டு செல்லும் (படம்3). இந்த வகை புத்தி ரேகை உடையவர்கள் அறிவாற்றல் கொண்டவர்களாகவும், உணர்ச்சிவசப்படாமல் அறிவின் திறத்தினால் ஆராய்ந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
2. ஆயுள் ரேகையை, தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கையின் மையப்பகுதியோடு குட்டையான ரேகையாக இது முடிந்துவிடலாம் (படம்4). இத்தகைய ரேகையை உடையவர்கள், நல்ல சிந்தனையாளர்கள், உலக அறிவும், அனுபவ அறிவும் உடையவர்கள். கல்வி வாய்ப்புகள் தடைப்பட்டாலும், இயற்கையாகவே அறிவாற்றல் மிக்கவர்கள்.
3. ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம். (படம்5). இப்படியான புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி, கலை, பொது அறிவு அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.
4. ஆயுள்ரேகையின் ஆரம்பப் பகுதியைத் தொடாமல், சற்றுத் தள்ளி ஆரம்பித்து நீளமாகவோ, குட்டையாகவோ, கிளைகளாகவோ பிரிந்தும் புத்தி ரேகை செல்லலாம் (படம்6). இவ்வகையிலான புத்தி ரேகை அமைந்தவர்கள் அறிவாற்றலும், விவேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கைச் சம்பவங்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் சற்று குறையும்; அனுபவபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் அதிகரிக்கும். இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகளும் அதிகம் உண்டு.
5. புத்தி ரேகை ஆயுள் ரேகையைத் தொட்டுக்கொண்டு ஆரம்பிக்காமல், இருதய ரேகை ஆரம்பமாகும் இடத்தில் அந்த ரேகையுடன் பின்னிக்கொண்டு தொடங்கி உள்ளங்கை வரையிலும் நீண்டிருந்தால் (படம்7), உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். கல்வியில் விருப்பம் குறைவு. எதையும் திட்டமிட்டு செயல்பட விரும்ப மாட்டார்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருப்பார்கள். இவர்கள் சாமர்த்தியமாக அறிவாற்றலை பயன்படுத்தும்போது விவேகியாகவும், உணர்ச்சி வயப்படும்போது உணர்ச்சிபூர்வமாகவும் செயலாற்றுவார்கள். தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், அரசியல் மேதைகள் ஆகியோருக்கு இத்தகைய அமைப்பு இருக்கும்.
மேலே குறிப்பிட்ட ஐந்து வகைகளைத் தவிர, வேறு வித்தியாசமான அமைப்புகளும் உண்டு. அவை பற்றியும், புத்தி ரேகையின் கிளைகள், அந்த ரேகையை குறுக்கிடும் வேறு ரேகைகளால் உண்டாகும் விளைவுகள், புத்தி ரேகையின் மீது அமைந்துள்ள குறியீடுகளால் ஏற்படும் பலன்கள் ஆகியவற்றையும் தெளிவாக அறிவது அவசியம்.
* புத்தி ரேகை, குரு மேட்டில் இருந்து ஆரம்பித்தாலும் அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை குரு மேட்டை நோக்கிச் சென்றாலும் புத்திசாலியாகவும், திட்டமிட்டு செயலாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை, எழுத்துத் திறமை, கலைத் திறமை, சிறப்பான வாழ்க்கை அமையும்.
* புத்தி ரேகை சனி மேட்டை நோக்கி வளைந்திருந்தாலோ, அல்லது ஒரு சிறிய ரேகை சனி மேட்டை நோக்கிச் சென்றாலோ திறமை, அறிவு ஆகியவற்றுடன் ஆணவமும், அதிகாரப் பற்றும் மிகுந்திருக்கும். பொருளீட்டும் தன்மையும் மேலோங்கி நிற்கும். தானே எல்லோரிலும் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருக்கும்.
* புத்தி ரேகை சூரிய மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும் அல்லது புத்தி ரேகையிலிருந்து சிறிய ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்8) தெளிவான புத்திமானாகத் திகழ்வார்கள். கல்வி கலைகளில் சிறந்தவராகவும், புகழ் பெற்றவராகவும், நீதிமானாகவும் திகழ்வார்.
* புத்தி ரேகையின் கடைசிப் பகுதி, புதன் மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை புதன் மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்9) தொழில் வியாபாரத்திலும், அறிவாற்றலால் பொருளீட்டுவதிலும் திறமை அதிகமாக இருக்கும்.
* புத்தி ரேகை சந்திரமேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையிலிருந்து கிளை ரேகை சந்திரமேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்10) கலைகளில் ஈடுபாடு, சிறப்பான தொழில் கல்வி, வெளிநாட்டு பயணம், பெண்களால் மதிக்கப்படுதல், அகங்கார குணம் ஆகியன அமையும்.
* புத்தி ரேகை செவ்வாய் மேட்டில் முடிவடைந்தாலும், அல்லது கீழ் செவ்வாய்மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது ஒரு சிறிய ரேகை கீழ் செவ்வாய்மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம்11) தெளிவில்லாத அறிவு, திறமைக் குறைவு, அறிவைத் தவறாகப் பயன்படுத்துதல், முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம் ஆகிய பலன்கள் உண்டு.
* இரண்டு புத்தி ரேகைகள் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லுமானால் (படம்12) உலகம் போற்றும் அறிவாற்றலும் அதிர்ஷ்டமும், எதிர்பார்க்காத வெற்றிகளும் உண்டாகும்.
* துண்டு துண்டாக முறிந்து செல்லும் அல்லது சங்கிலி போல் செல்லும் புத்தி ரேகை எனில், மிகக் குறைவான அறிவு, எதிலும் குழப்பம், தொடர் தோல்விகள் உண்டு.
* குரு மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், தெளிவில்லாத புத்தி, குறுகிய காலத்துக்கு புத்தி பேதலித்தல், ஒரு முடிவு எடுக்கமுடியாத குழப்ப நிலை ஆகிய பலன்கள் உண்டு.
* சனி மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால் விபத்துகளால் மூளை பாதிப்பு ஏற்படும்.
* சூரிய மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், புத்திசாலித்தனமும், வெற்றி வாய்ப்புகளும் குறைவாக இருக்கும்.
* புதன் மேட்டுக்குக் கீழே புத்தி ரேகையில் தீவு போன்ற அமைப்பு இருந்தால், மூளை பாதிப்பு, அகால மரணம் சம்பவிக்கலாம். நோயால் துன்பம் உண்டு.
* புத்தி ரேகை இருதய ரேகையை குறுக்கிட்டு சென்றால், கோழையாக வாழ்வார்கள்.
* புத்தி ரேகையின் முடிவில் பல கிளைகளாகப் பிரிந்து வலை போன்று காணப்பட்டால், பொய் பித்தலாட்டங்களில் நாட்டம் உண்டாகும்.
இனி, புத்தி ரேகையில் உள்ள குறியீடுகளுக்கான பலன்கள் குறித்து அறிவோம்.
சிவப்பு அல்லது வெண்புள்ளி: வெற்றியும் புகழும் கிட்டும்
கறுப்புப் புள்ளிகள்: தவறான முடிவுகள், குற்றங்களில் ஈடுபாடு
உண்டாகும்.
பெருக்கல் குறி: குறுக்குப் புத்தி உண்டு, விபத்துகளும் தலையில் காயங்களும் ஏற்படும்.
நட்சத்திரக் குறி: குழப்பம், தோல்வி தரும் சிந்தனைகள்.
சிறு வட்டம்: செயலில் இறங்கியபிறகு சிந்திப்பவர்கள்.
சிறிய முக்கோணம்: சரிபட செயல்படாமல் நஷ்டம் ஏற்படும்.
ரேகையின் இறுதியில் சதுரம் அல்லது முக்கோணம்: வெளி நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டுவார்.
ரேகையின் முடிவில் பெருக்கல் குறி: அவசர புத்தி செயல்கள்.
புத்தி ரேகைக்கான பலன்கள் பார்ப்பது குறித்து வேறுசில தகவல்களும் உண்டு. மற்ற ரேகைகளின் தன்மையைப் பற்றி ஆராயும்போது, இதற்கான விளக்கங்களும் தெளிவாகும்.
பொதுவாக ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவரது வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், செல்வம் செல்வாக்கு, பதவி, அதிகாரம், புகழ், குடும்ப வாழ்க்கை, ஆயுள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆயுள் ரேகையும், புத்தி ரேகையுமே நிர்ணயிக்கின்றன.