மரணம்:-

மரணம்:-


மனிதன் என்று தோன்றுகின்றானோ அன்றே அவனின் இறப்பும் எழுதப்படுகிறது என்பர். மனித உயிர் உருவாகும் போதே, உயிரின் கருவில், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய அறு பருவங்களும் அமைகின்றன.

பேறு யிளமை யின்பம் பிணி மூப்பு சாக்காடு
ஆறுங் கருவில மைப்பு

என்று குறிப்பிடப்படுகிறது. பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும். உறங்குவது போலும் உறங்கி விழிப்பது போலும் எனக் கண நேரத்தில் அவ்விரண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றும் கருதப்பட்டது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்னும் குறள் கூறும் கருத்து சித்தர்களுக்கு உடன்பாடானதன்று.

# மரணத்தை வெல்லுதல் :-

மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக் காண்பதே சித்தர்களின் கற்ப சாதனை என்பது போல், கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், மரணத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் கூறக் காணலாம்.

வேம்புக் கற்பம் என்னும் மருந்தை உண்டுவந்தால் மரணமில்லை என்கிறது கற்பவிதி.

கொண்டிட்டால் வைரம்போல் இறுகும் தேகம்
குறிப்பாகக் கண்ணிரண்டும் சிவப்பு மாகும்
நன்றிட்டால் நரம்பதுவு முறுக்கு மாகும்
நரைதிரையும் மாறியே ஞான முண்டாம்
உன்றிட்டால் யோகத்தில் உறுதி யாகும்
ஒரு காலும் சாவுமில்லை உண்மை தானே

என்று மரணத்தை வெல்லும் வழியைக் கண்டறிந்திருப்பது அறிவியல் முறையாகும்.

# உடலும் உயரமும் :-

ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர். (அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும்.

அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.) ‘எண் சாண் உடலம்’ என்பதும், ‘எறும்புக்கும் தன்கையால் எட்டு’ என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்
செப்புமங் குலமவர்கள் கையாலே தான்

என்பர், இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும்.

அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது. அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கிவிடுகிறது. மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்துவிடுகிறது.

உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்.

#எட்டு :-

சித்தர்கள் கண்ட அறியியல் தத்துவத்தின் படி எட்டு என்பது அடிப்படைக் கணக்காகக் கருதப்படுகிறது. மனித உயிர் எட்டை அடிப்படையாகக் கொண்டு பிறப்பதைப் போல, அந்த உடம்புக்கு ஏற்றவையும் எட்டு என்றே கருதினர்.

சொல்லிய நாழி கொண்டு
தூணியில் எட்டொன் றாக்கி”

நன்னீர் விட்டே எட்டொன்றாய்
நாடிக் காய்ச்சிக் கொள்வீரே

என்று, மருந்துப் பொருள்கள் எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால், உடம்புக்கு மருந்தாகும். இல்லாவிட்டால் அவை விருந்தாகும் (உணவு) என்று கண்டனர்.

இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

இயம்பிட எளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண் மின்
நயம் பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம் பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்

என்று எந்தவிதமான மருந்துப் பொருளையும் சேர்க்காமல் தண்ணீரை மருந்தாக மாற்றும் முறையைக் கண்டறிந்துள்ளனர். தாயின் வயிற்றில் கருவாகத் தோன்றும் போது எந்த முறையில் தோன்றினோமோ அந்த முறையில் அமைவதே மருந்து எனக் கருதியதால் இந்தச் சிந்தனை தோன்றி இருக்கலாம். எனவே, இதுவும் அறிவியல் அடிப்படையாகவே இருக்கக் காணலாம்.

#விந்து:-

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன. அந்த மூலத்தை உயிர் மூலம் எனலாம்.

அந்த உயிர் மூலத்துக்குச் சித்தர்கள் ‘விந்து’ எனக் குறியடையாளம் கொள்வர். விந்து உயிரையும் உடலையும் உருவாக்குவது மட்டுமல்ல பாதுகாக்கவும் செய்கிறது. ‘விந்து கெட்டவன் நொந்து சாவான்’ என்பது பழமொழி.

உடம்பில் ஒரு துளியளவு விந்து இருக்கும் வரை உயிர் உடலைவிட்டு நீங்காது என்பது சித்தர்கள் கொள்கை.

உந்தனுடைய விந்தழிந்தால் யெல்லாம் போச்சு
உண்டதெல்லாம் பாழாச்சு உறவும் போச்சு
விந்துதனை இழந்து பல பிணிக்குள் ளாகி
மெலிந்து கெட்டுப் போகாமல் விள்ளு வேனே

விந்து அழிந்து விட்டால் நன்மையெல்லாம் போய்விடு வதுடன் நோய்கள் வந்தடையும் என்று எச்சரிக்கக் காணலாம். விந்து பிறப்புக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் கருத்துக்கு மாறாக, விந்து பற்றிய அறிவியல் உண்மையாக உரைக்கக் காண்கிறோம்.

# அணுச் செயல் மாற்றம் :-

சித்தர்கள், அணிமா முதலிய எட்டுவகையான சித்துகளில் வல்லவர்கள். தம் உடம்பின் இரகசியங்களை அறிந்து தம் விருப்பப்படி அணுவின் செயல்களை மாற்றிக் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அறிவியலில், அணுக்கருச் சிதைவு (Neuclear Fission) என்னும் முறையின்படி ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன் மூலம் அப்பொருளை வேறு பொருளாக மாற்றலாம் எனக் கண்டுள்ளனர்.

ஒரு பொருளைப் பற்றிய அறிவும் அப்பொருளின் கருவைப் பற்றிய அறிவும் பெற்றவர்கள் எப்பொருளையும் வேறொன்றாக ஆக்கல் கூடும். இதேபோல் மனிதர்க்கு இன்றியமையாக் கருவாக இருப்பது DNA (De(s)oxy ribonucleic acid) எனப்படும் உயிர்ப் பொருளாகும். இதுவே இயல்புகளையும் குணங்களையும் நிர்ணயிப்பது என்பது அறிவியலார் கூற்று. எனவே ஒவ்வொரு உயிரின் DNA வையும் பற்றிய தெளிந்த அறிவு பெற்றவர்கள் தம் கருவை DNA மாற்றுவதன் மூலம் வேண்டிய வடிவங்களில் மாற்றிக் கொள்ளுதல் கூடும். இம்முறையில் ஒருவர் ஈயாகவும் யானையாகவும் உருவெடுத்தல் கூடும்.

பரிசோதனைக் குழாயில் (Test Tube) செயற்கை முறையில் குழந்தையை உண்டாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அறிவியலுக்கு இந்த தத்துவம் விளங்காததாகவோ புரியாததாகவோ இருக்க முடியாது. இவ்வுடம்பு கண்ணுக்குத் தெரியாத நிலையும் பெறுதல் கூடும்.

பொருள்கள் மூன்று நிலையினை யுடையன.
1.ஒளிபுகும் (ஒளி ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்துக்கு ஊடுருவிச் செல்வது) (Transparent),
2. ஒளி புகாப் பொருள் (Opaque),
3. ஒளி கசியும் பொருள் (Translucent) இம்மூன்று நிலைகளில் நம்முடம்பு ஒளிபுகாப் பொருளில் அடங்கும்.

யோகப் பயிற்சியின் மூலம் உடம்பின் இயல்பை மாற்ற முனையும் போது ஒளி புகும் பொருளாக மாறுமேயானால் கண்ணுக்குப் புலனாகா வடிவமாகும். இந்நிலையின் உயர்நிலையே காற்று வடிவமாகும். இதனை அருவமாதல் (Translucent) என்பர். பஞ்ச பூதங்களில் எந்த வடிவமாகவும் சித்தர்களால் இருக்கக் கூடும் என்பது சித்தர்களது உறுதியான நம்பிக்கை. வேறொருவர் காணாமல் உலகத்துலாவலாம் எனத் தாயுமானவர் கூறுவதும் காண்க.

#வள்ளலார் ஒளியுடம்பு :-

வடலூர் இராமலிங்க வள்ளலார் வழக்கு ஒன்றுக்காக நீதி மன்றம் வந்த போது, அவரைப் புகைப்படும் எடுத்தனர். படச்சுருளை எடுத்துப் பார்த்த போது அது வெள்ளையாக இருந்ததென்பர். காரணம், சித்தர் நிலைக்கு உயர்ந்த வள்ளலார், ஒளி வடிவாக இருந்ததே என்பர்.

நோயை அறிவதிலும் அந்நோயைப் போக்கும் மருந்துகளைச் செய்வதிலும் தங்கள் ஆற்றலைப் பயன் படுத்திய சித்தர்கள், நோய் வருவதற்கான காரணத்தை அறிவதிலும் சிறந்திருந்தார்கள். வந்த நோயையும் போக்கும் வழியையும் புலப்படுத்தும் அறிவியலே நோயின் மூலத்தையும் அறிவுறுத்துவதாகும். அவ்வாறே மேக நோய் உண்டாவதற்கான ஏதுக்களைக் குறிப்பிடும் போது பதினெட்டு வகையான ஏதுக்களைக்கூறி
பதினெட்டு வகை மேகநோய் என்றனர். அதாவது,

மாதர் மயக்கம்,
அச்சம்,
போதைப் பொருள்,
மீன்,
இறைச்சி,
நெய்,
பால்,
சீத உணவு,
பதனழிந்த தினை,
மிகுந்த உணவு,
உடல் பருமன்,
இனிப்பு,
தூக்கமின்மை,
பசியின்மை,
அதிக பசி,
அதிக உடல் உறவு,
போகமின்மை
கடின உழைப்பு

என, சித்தர்கள் மேற்கொண்ட முறைகள் அனைத்தும் இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டுக் காணும் போது, சில அறிவியலோடு ஒத்துப் போவதாகவும் சில அறிவியலால் அறியாதவையாகவும் இருக்கக் காண்கிறோம். வாழ்வில் நோய் என்னும் துன்பத்தை அண்ட விடாமல் தடுக்கும் முயற்சியாகக் கற்பங்கள் விளங்குகின்றன.

மரணத்தை வென்று அழிவிலிருந்து மனிதர்களை காக்கும் முறையாக யோக முறைகள் அமைகின்றன.

ஆக, கற்பமும் யோகமும் என உடலியல், உயிரியல் ஆகிய இரண்டு அறிவியல் முறைகள் முழுமையாகக் கண்டறியப் பட்டிருக்கின்றன. சித்தர் நெறி என்பது, அது தொன்மையான அறிவியலார் மேற்கொண்ட வாழ்க்கை நெறி எனக் கூறலாம்.

#தொகுப்புரை:-

பழந்தமிழகத்தில் மருத்துவத்தையும் யோக முறை களையும் தோற்றுவித்தவன் ‘சிவன்’எனத் தெரிகிறது. அவனே, முதல் சித்தனும் ஆவான். அவனின் நெறியே சிவநெறி ஆயிற்று.

அவனைத் தொடர்ந்து மருத்துவத்தையும் யோகத்தையும் பயின்றவர்கள் பலர்.

அவர்களைப் பற்றிய விபரங்கள் தெளிவில்லை. ‘திருமூலர்’ என்பவரால், மருத்துவமும் யோகமும் நடைமுறைக் கல்வியும் பரம்பரை முறையில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன.

சித்தர் என்னும் மரபுக்கு முதன்மையானவராகத் திருமூலரைக் குறிப்பிடலாம். அவரைத் தொடர்ந்தே சித்தர் மரபு தோன்றியிருக்கிறது.

வாழ்க்கைக்குப் பயனுடைய மருந்தும், மரணத்தை வெல்லும் மன ஆற்றலான யோகமுறையும், அமைதிக்கும் மனித நேயத்துக்கும் புகழுக்கும் காரணமான சித்தர்களின் புறவொழுக் கங்களும் சிறப்புக்குரியவை. அனைவராலும் மேற்கொள் வதற்கு ஏற்றவை. உரிய முறையில் ஆய்வுகள் நிகழ்த்தி தேவையான திருத்தங்களை நிகழ்த்தி சித்தர்நெறியை வாழ்வியல் நெறியாகக் கொள்வது பயனைத்தரும்.